ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

எம்மால் மறக்கமுடியுமா...?



வன்னியில் ஓர் அதிர்வு.
பூகம்பம் பூக்கவில்லை
பூமித்தாய் பெற்றெடுத்த தமிழினம்.
எரி குண்டிற்கு இரையானது...
கண்டவர் நெஞ்சம்.
காதால் கேட்டவர் உள்ளம்.
அன்றும் இன்றும் புண்பட்ட...
நெஞ்சோடு உலா வருவது தான் உண்மை.
இது இயற்கை அழிவல்...
செயற்கை அழிவுதான்.


அம்மா என்று உணரத் தெரியாத பருவங்கள்.
அங்கம் அங்கமாய் அள்ளியதை...
எம்மால் மறக்க முடியுமா...?
தாயோடு சேயை மட்டுமல்லாமல்...
கருணை காட்டும் வேதாகமத்தையும்...
சேர்த்து அணைத்தபடி...
உயிர் மூச்சைக் காற்றோடு...
கலக்க வைத்ததை எம்மால் மறக்கமுடியுமா...?


கருவறையில் சேயோடு...
கல்லறையாய் மாறியதை எம்மால் மறக்கமுடியுமா...?
உறவுகள் உயிரின்றி பிணமாய்
மாற்றியமைத்ததை எம்மால் மறக்கமுடியுமா...?
ஒளிவீச்சின் ஓலங்கள் எம் நெஞ்சில்.
அவலங்களாய் மாறியதை எம்மால் மறக்கமுடியுமா...?


உலக நாடுகள் உறங்குவதும்...
ஊமையாய் மாற்றப்படுவதும்...
இன்றல்ல நேற்றல்ல...- இது
நெடுங்காலத் தொடர்கதை.
தமிழர் நாம் ஒன்று திரண்டால்... - எம்
தாயகம் எமக்கே சொந்தம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails